திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.11 திருப்புனவாயில் பண் - காந்தாரபஞ்சமம் |
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.
|
1 |
விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடங்
கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
புண்டாரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.
|
2 |
விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறா பாரிடம்
புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற்
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்
படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.
|
3 |
சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.
|
4 |
கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.
|
5 |
வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற்
சீருறு வெல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.
|
6 |
பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத்
திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே.
|
7 |
மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி யொல்கிட
வனமிகு மால்வரை யாலடர்த் தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.
|
8 |
திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்
கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.
|
9 |
போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.
|
10 |
பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |